ஐடி ஊழியர்களிடம் பணம் பறித்த போலீசார் தென் மண்டல இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பனையூரில் ஐடி ஊழியர்களை தாக்கி போலீசார் பணம் பறித்த விவகாரத்தில் தென் மண்டல இணை ஆணையர், அடையார் டிசி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவான்மியூரை சேர்ந்தவர் கார்த்திக்(25) ஐடி ஊழியர். இவர் சிறுவர்களுக்கு மலையேறும் பயிற்சி அளித்து வருகிறார். இவரது நண்பர் சத்தியமங்கலத்தை சேர்ந்த யஷ்வந்த்(27). இவர்கள் இருவரும் கடந்த 16ம் தேதி பனையூர் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கானத்தூர் காவல் நிலைய போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன், தணிக்காசலம் ஆகியோர் இவர்களிடம் விசாரித்தனர்.

இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், இருவரையும் கைது செய்வோம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் பணம் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் போலீசாரிடம் ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகர கமிஷனர், போலீசார் இரண்டு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தினகரன் நாளிதழில் இந்த செய்தி வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஜெயசந்திரன், காவலர்கள் மீது ஏன் வழிப்பறி வழக்கு பதியவில்லை. காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கானத்தூர் இன்ஸ்பெக்டர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என 4 வாரத்தில் பதிலளிக்க தென் மண்டல இணை ஆணையர், அடையார் துணை ஆணையர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: