லாரி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ₹19 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி பிருந்தாவுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் - திருத்தணி இடையே சுங்கசாவடி அருகே சென்றபோது, அந்த வழியே வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சங்கரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.  இதில் கணவன், மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், பிருந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சங்கர் தனது மனைவி உயிரிழப்பிற்கும், தனக்கு ஏற்பட்ட காயத்திற்கும் தனித் தனியாக இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டர் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரேவதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையில் பிருந்தா லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரது இழப்பிற்கு ₹19 லட்சத்து 8 ஆயிரத்து 950 ரூபாயும், சங்கருக்கு ஏற்பட்ட காயத்திற்கு ₹30 ஆயிரமும் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Related Stories: