சென்னை: அறநிலையத்துறை மீதான வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு அதன் மூலம் கோர்ட் நடவடிக்கைகளை முடிக்க தீவிரம் காட்டி வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவதில் விதிமீறல், திருப்பணிகளில் முறைகேடு, கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்பு, நகைகள், சிலை மாயம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக இந்து அமைப்புகள், பக்தர்கள் அறநிலையத்துறை மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் அறநிலையத்துறை மீது தொடர்பாகன வழக்குகளை விரைந்து முடிக்க அதற்கென தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வழக்கு தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.