சென்னை: பூஜை தட்டு, சடாரி, கலசங்கள் என்று பயன்பாடற்ற பொருள் என்ற பெயரில் பழமை வாய்ந்த கோயில் பொருட்களை டெண்டர் விடுவதில் பலகோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கோயில் பொருட்களை பூம்புகாரிடம் விற்பனை செய்ய அறநிலையத்துறை கமிஷனர் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் பூஜை தட்டு, கலசங்கள், தீர்த்தம் வழங்கும் கலசம் உள்ளிட்ட பித்தளை, செம்பால் ஆன பொருட்கள் டெண்டர் விட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில், பயன்பாடற்ற பொருட்கள் எனக்கூறி கலை நயம் மிக்க பழங்கால பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பழைய பயன்பாடற்ற பொருட்களை குறைந்த மதிப்பில் கோயில் நிர்வாகம் டெண்டர் விடுவதால் அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து பயன்பாடற்ற பித்தளை, செம்பு பொருட்களை பூம்புகார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.