துபாய்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், போட்டிகளின் நேரடி ஒளிபரப்பின்போது வர்ணனையாளர்களாக செயல்பட உள்ள குழுவினரின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பல்வேறு அணிகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 46 நாளில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பில் ஐசிசி அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவற்றுடன் 10 பயிற்சி ஆட்டங்களும் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டிக்கும் 8 ‘ஹாவ்க் ஐ’ கேமரா உட்பட குறைந்தபட்சம் 32 கேமராக்கள் பயன்படுத்தப்படும்.