பல்லாவரம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரித்து வருவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரி, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அனகாபுத்தூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, தி.நகர், அஸ்தினாபுரம், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக இந்த பேருந்து நிலையத்தில் குடிமகன்கள் மது அருந்துவதுடன், போதையில் அங்கேயே மயங்கி கிடக்கின்றனர். மேலும், ஆதரவற்றோர், மனநோயாளிகள் ஆகியோரும் பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.