திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாளை (18ம் தேதி) வைகாசி விசாகத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இத்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்தை சேருகின்றனர். அங்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்ததும் சுவாமி அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கதேரில் எழுந்தருளி கோயிலை சேர்ந்தார். வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று (17ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.