நெல்லை: தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது. இந்த 4 தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டப்பிடாரத்தில் 15 பேர், சூலூர் தொகுதியில் 22 பேர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர், அரவக்குறிச்சியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகிறார்கள்.
நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் வெளியூர்களில் வந்து ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் தொகுதி வாசிகள் தவிர வெளியூரைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.