காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் மார்க் கப்பல் துறைமுகத்தில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி, ஜிப்சம், சர்க்கரை, சுண்ணாம்பு கல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட கட்டுமான பணிக்கு ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து, பல்வேறு தரப்பினர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு முதல்வர் பதில் கூறுகையில், விரைவில், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி அமைச்சரவை, வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்து, அதற்கான உத்தரவுகளை வழங்கியது. தொடர்ந்து, அபான் என்ற நிறுவனம் மலேசியாவிலிருந்து அதாஷ் என்ற கப்பல் மூலம் 50 ஆயிரம் டன் மணலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு கொண்டுவந்தது. இந்த மணலை நேற்று கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறுகையில், ‘புதுச்சேரி அரசின் ஒப்புதல்படி, சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணல் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, காரைக்கால் கொண்டுவரப்பட்ட மணலை வேளாண்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் மணலை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை வந்தவுடன் சட்ட விதிகள்படி இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படும்’ என்றார்.