சென்னை: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மேகேஸ்வரன் இதனை அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மழையளவு வழக்கத்தைவிட 69% குறைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சியான சூழல் காணப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீரான முறையில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 550 கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலமாக 4 கொடியே 23லட்சம் மக்கள் தினமும் பயன்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஆண்டு மட்டும், சராசரியாக 1,856 மில்லியன் லிட்டர் தண்ணீரானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.