சென்னை: கோயில் நிலத்தை மீட்க முயற்சி செய்த கோயில் செயல் அலுவலர், பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட முயன்றவர்கள் மீது செயல் அலுவலர் சீனிவாசன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிறு கிராமம் அருகே புஷ்பரதீஸ்வரர் கோயில் பணிகளை முடித்து மாலை 3 மணி அளவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் பணியாளர் தனஞ்செயன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, ‘எங்கள் மீதே போலீசில் புகார் கொடுப்பீங்களா?’ என்று மிரட்டியுள்னர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.