இலங்கையில் மீண்டும் பதற்றம்..... இருதரப்பு மோதலால் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

கொழும்பு:  இலங்கையில் மீண்டும் வன்முறை வெடித்ததால் ஒருசில சமூக வலைத்தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. கொழும்பு அருகே சிலாவ் பகுதியில் உள்ள மசூதி மீது சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் என மொத்தம் 8 இடங்களில் நடந்த மனித குண்டு தாக்குதலில், 250 பேர் பலியாயினர். இச்சம்பவம் நடந்ததில் இருந்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது, அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இது அவ்வப்போது மோதலாகவும் வெடிக்கிறது. நீர்க்கொழும்பு பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கையில் கடற்ரை நகரமான சிலாவில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கு கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர்.  கிறிஸ்தவ பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவரின் கடையில் வைத்து மிரட்டப்பட்டதால் இந்த மோதல் தொடங்கியது. இதில், மசூதி ஒன்றும், முஸ்லிம்களின் 5 கடைகளும் தாக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து சிலாவ் நகரில் இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் வதந்திகள் பரவுவதை தடுக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற ஒருசில சமூக வலைத்தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.

Related Stories: