குற்ற வழக்குகளை முழுவதுமாக மறைத்தவர்களுக்கு சீருடை பணி நியமனம் பெற உரிமை இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: குற்ற வழக்குகளை முழுவதுமாக மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றில் பணி நியமனம் பெற உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து 2003ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.அதன்படி, காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு,  சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ,  விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும், சரிபார்ப்பின் போது குற்ற வழக்கு நிலுவையிலிருந்து பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டால் அடுத்த தேர்வு நடைமுறையில் கலந்து கொள்ள உரிமை கோரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த பின்னணியில், 2017ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், குற்ற வழக்குகளை மறைத்ததாகவும் கூறி, தங்களது விண்ணப்பத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்ததை எதிர்த்து பிரவீன்குமார், அழகுராஜ் உள்ளிட்ட 46 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பழுக்கற்ற குணநலன்களும் நேர்மையும் கொண்டிருக்க வேண்டும். குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்தால் காவல்துறை பணிக்கு அவர்கள் உகந்தவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்ற பல வழக்குகளில் கருத்து தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில், குற்ற வழக்குகளை முழுவதுமாக மறைத்தவர்களின் விண்ணப்பங்களை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தது சரிதான். அதேசமயம் வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களை தேர்வில் கலந்து கொள்ளவும், பணி நியமனம் வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், குற்ற வழக்குகளில் சமரசம் செய்து கொண்டாலோ, முதல் தகவல் அறிக்கையிலிருந்து பெயர் நீக்கப்பட்டாலோ அவர்களை பணிக்கு அமர்த்தினால் காவல் துறைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு பணி நியமனம் தருவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய முடியும்.  இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: