திருவள்ளூர்: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பிரபலமான ஆசிரியர் பகவான் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜப்பேட்டையைச் சேர்ந்தவர் பகவான். இவர் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் பகவான். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்காக விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர். இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மாணவர்கள்-ஆசிரியரின் பாசப்போராட்ட வீடியோ வைரலானது. பல்வேறு ஊடகங்களும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்து செய்திகள் வெளியிட்டன.