மதுரை: கட்டாய கல்வி சட்டப்படி முழுமையான நிதியை ஒதுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை கே.கே.நகரை சேர்ந்த வெரோணிக்கா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் அமலானது. இதன்படி, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி, புத்தகம், சீருடை மற்றும் காலணி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதில்லை.இச்சட்டப்படி, தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். இதை மீறி ஆண்டுதோறும் புத்தகம், சீருடை உள்ளிட்டவைக்காக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழை பெற்றோர் பாதிக்கின்றனர். கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.