பெரம்பூர்: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 1000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடு, தெருக் குழாய் மற்றும் டேங்கர் லாரிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யாத மாநகராட்சியை கண்டித்து நேற்று காலை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தங்கசாலை, உயர்நீதிமன்றம், எண்ணூர், மணலி செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘‘இந்த பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என உறுதி கூறினர். இதை ஏற்று மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.