சேலம்: சேலம் அருகே தொடர்ச்சியாக ரயில் பயணிகளிடம் வடமாநில கொள்ளையர் நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதால் டிஜிபி தலைமையில் 300 போலீசார் விடிய விடிய காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள மாவெலிப்பாளையம் அருகில் கடந்த 3ம்தேதி இரவு அவ்வழியாக வந்த மைசூர், சேரன், மங்களூரு, ஆலப்புழா ஆகிய ரயில்களில் 10 பயணிகளிடம் 30 பவுன் நகையை வடமாநில கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.
மாவெலிப்பாளையம் பகுதியில் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதால் இந்த இடத்தில் மட்டும் ரயில்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இதனை பயன்படுத்திய வடமாநில கொள்ளையர், அயர்ந்து தூங்கும் பயணிகளை குறி வைத்து தங்களது கை வரிசையை காட்டியுள்ளனர்.இதற்கிடையில் 2வது முறையாக, 5ம்தேதி ஆலபுழா,சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறிய கொள்ளையர்,3 பெண்களிடம் 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர்.அவர்களை ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரத்தியும் பிடிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக ரயில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் இந்த வட மாநில கொள்ளையர்கள் சங்ககிரி, சேலம், ஈரோடு பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.