புதுடெல்லி: எல்லையில் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவு தரங்குறைந்ததாக உள்ளதாக கூறி, கடந்த 2017ல் வீடியோ வெளியிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ். இவர் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த மாதம் 29ம் தேதி தேஜ் பகதூர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் எதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்தார். இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாய் நடந்து கொள்கிறது. மனு நிராகரிப்பு முறையற்றது. வேட்பு மனுவுடன் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், முன்னாள் ராணுவ வீரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பணி நீக்கம் செய்யப்படுகிறார். ஊழலுக்காகவோ அல்லது அரசுக்கு விசுவாசமாக இல்லை என்பதற்காகவோ அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.