புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகைகள் கொள்ளையடித்ததாக, கொலை செய்யப்பட்ட ஊழியர் மாரிமுத்து மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கொலையிலும், கொள்ளையிலும் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மாதம் 29ம் தேதி ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டது. இந்த தங்க நகைகளை அந்த வங்கியின் அலுவலக உதவியாளரான புதுக்கோட்டை திருகட்டளையை சேர்ந்த மாரிமுத்து எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த 3ம்தேதி மாரிமுத்துவை சடலமாக போலீசார் மீட்டனர்.