புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியின்போது 6 முறை, பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதுபற்றிய தேதி வாரிய விவரத்தையும் காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. தொடர்ந்து, தாங்கள்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறிவரும் பாஜ.வுக்கு பதிலடியாக இந்த தகவலை வெளியிட முடிவு செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியப் பகுதியில் தாக்குதல் நடத்தும்போது, தன்னுடைய அரசின் உத்தரவுப்படி ராணுவம் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிக்கல் நடத்தி அவர்களை ஒடுக்கி வருகிறது என்றும், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இந்த தைரியம் இருந்ததில்லை என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களில் பேசி வருகிறார். ஆனால், தங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்துள்ளது என்றும், ஆனால், ராணுவ வீரர்களை தேவையில்லாமல் அரசியலுக்கு இழுக்க விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். இப்போது மசூத் அசார் விவகாரத்திலும், இந்தியா அதிரடி முடிவு எடுத்ததன் மூலம்தான் ஐ.நா. அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது என்று பாஜ கூறி வருகிறது. ஆனால், இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை விடுவித்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜ அரசுதான் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.