திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் சிலையை ரகசியமாக அகற்றியதாக முன்னாள் இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சிலைக்கு முன்பாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் கற்சிலை இருந்தது. முருகனின் வாகனமான அதையும் பக்தர்கள் வழிபடுவர். இந்த சிலை பலகோடி மதிப்பு கொண்டது. கடந்த 6.8.2017ல் மயில் சிலை சேதமாகி உள்ளதாக கூறி அதை அங்கிருந்து அகற்றினர். இது பக்தர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டினருக்கு விற்கத்தான் அதை அகற்றி உள்ளனர் என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட சிலை 13 நாள் கழித்து 19.8.2017 அன்று அதே இடத்தில் வைக்கப்பட்டது. சிலை சேதமாகியிருந்தால் அதை மாற்ற அப்போதைய இணை ஆணையராக இருந்த பரஞ்ஜோதி, இந்து அறநிலையத்துறை ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை என தெரிகிறது.