சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவின் முதல் நாளான இன்று, 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையத்தில் இன்று முதல் மே 31 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் கல்வியாண்டிற்கான இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையத்தில் விண்ணப்பித்தல் இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதள வழி கலந்தாய்வை நடத்தியது. அண்ணாபல்கலைக்கழகம், உயர்கல்வித்துறை இடையேயான கருத்து முரண்பாட்டால், இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங்குக்கு வீட்டில் இருந்தபடியும், 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்களில் இருந்தும் இணையதளத்தில் (www.tndte.gov.in, www.tneaonline.in) விண்ணப்பித்தல் இன்று காலை தொடங்கியது. மே 31 கடைசி நாளாகும்.