லக்னோ: தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர், மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடவுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேஜ் பகதூர் யாதவ் ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது.