சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் கல்விதுறை (யுமன் ஸ்டடீஸ்) , சதர்லான்ட் நிறுவனம் இணைந்து கிளைட்(ஜென்டர் லேப் பார் இன்குலூசிவ்னஸ் அன்ட் டைவர்சிட்டி எஜூகேசன்) என்ற புதிய சான்றிதழ் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கையெழுத்தானது. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி, சதர்லான்ட் ஏசியா- பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் அனில் ஜோசப் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர். அந்த சான்றிதழ் படிப்பில் 22 மணி நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மணி நேரம் ஆன்லைன் பயிற்சி வகுப்பாகவும், 8 மணி நேரம் கருத்தரங்கு, நேரடி பயிற்சி வகுப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பை முடிப்பவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம், சதர்லான்ட் இணைந்து சான்றிதழகளை வழங்க உள்ளது. இந்த ஆய்வுக்கூடம் அமைக்க சதர்லான்ட் நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது.