கொழும்பு: வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பள்ளிவாசல்களை தாக்க வாய்ப்புள்ளதால் இன்று தொழுகைக்கு செல்வதை தவிர்க்க இலங்கை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குப்பு பள்ளிவாசல் என்றழைக்கப்படும் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் நீத்த இஸ்லாமிய தலைவர்களை நினைவு கூறும் வகையிலான இந்த பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஹோட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி