சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடத்துவதில் தொடர் தாமதம் ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த நிகழ்வு வெளியே வந்து தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது புரியாமல் இருக்கிறது.
இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி நாற்பது நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வழக்கை முறைப்படி சி.பி.ஐயிடம் ஒப்படைத்து விசாரணையைத் தொடர்வதில் ஏன் இத்தனை தாமதம் என்பது புரியவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. அரசு இதைப்பற்றிக் கவலைப்படுகிறதா என்று தெரியவில்லை.பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு காட்டும் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி