கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நால்ரோடு அருகே திருநாராயணபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது. இங்கு கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டு குழந்தையின் தன்மை குறித்து பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது.இந்த சோதனைகள் பற்றிய குறிப்புகளை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முறையான அறிக்கை தயார் செய்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ஸ்கேன் செய்யப்படும் விபரங்களை முறையாக பராமரிக்கவில்லையென டெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் சோதனை நடத்தினர்.