சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவ -மாணவியர் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு மே மாதம் நடக்கிறது. இதற்காக தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், தேர்வு மைய குறியீட்டு எண்களை ஒதுக்கியுள்ளதில் பல குளறுபடி நடந்துள்ளது என்றும் பலருக்கு வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.