சென்னை: வாக்களிப்பதை கவுரவமாக கருதும் நிலை உருவாக்க வேண்டும் என்றும் அந்த நாள்தான் உண்மையான ஜனநாயகம் மலரும் நாள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பீட்டளவில் இது மனநிறைவளிக்கும் எண்ணிக்கை தான் என்றாலும் கூட, நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குரிமையை செலுத்தத் தவறியதை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.
வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியாவிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன.