சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில், 1008 யாக குண்டங்கள் அமைத்து, வேள்வி பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, 1008 யாக குண்டங்கள் அமைத்து மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று நடத்தி வைத்தார்.மழை வளம் பெருகவும், மக்கள் மன நிம்மதியுடன் வாழவும், உலக நன்மைக்காகவும் இந்த வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், ய் சதுரம், அறுகோணம் உள்பட பல்வேறு வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையொட்டி, சித்தர் பீட ஓம் சக்தி மேடையின் முன், அண்டத்தை காக்கும் முகமாக அண்டவெளி சக்கரம் எனும் பிரமாண்டமான சக்கரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கருவறை முன்பாக பஞ்ச தெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன் இயற்கை சக்கரம் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன.மேலும், அதர்மத்தையும், தீமைகளையும் அகற்றும் விதமாக கத்தி, பிரம்பு, சாட்டை, சூலம், கதை, சங்கு சக்கரம் போன்ற ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று வேள்வியின் தொடக்கமாக மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், யாகசாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டு பின்னர், கோ பூஜை நடத்தப்பட்டது.