கோலாலம்பூர்: கத்தாரில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று தகுதிப் போட்டிகள் ஜூன் 6, 11 தேதிகளில் நடைபெற உள்ளன.உலக கோப்பை கால்பந்து போட்டியின் 22வது தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.இதில் ஆசிய(ஆசியா- ஓசியான்) கண்டத்தில் இருந்து 5 நாடுகள் பங்கேற்க அனுமதிக்கப்படும். ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் நாடு நேரடியாக தகுதி பெறும். இப்போது நடப்பு சாம்பியன் என்றமுறையும், போட்டி நடத்தும் நாடு என்ற அடிப்படையிலும் கத்தார் ஏற்கனவே தகுதிப் பெற்று விட்டது.அதனால் எஞ்சிய நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் ஆசிய நாடுகளிடையே நடைபெறும். ஆசிய கண்டத்தில் உள்ள 46 நாடுகள் இந்த தகுதிப் போட்டியில் பங்கேற்கும். தகுதிப் போட்டிகள் 4 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் 35 முதல் 46 ரேங்கில் உள்ள நாடுகள் மட்டும் விளையாடும்.தொடர்ந்து நடைபெறும் 2வது சுற்றில் ஒன்று முதல் 34வது ரேங்க் வரை உள்ள நாடுகள் விளையாடும. முதல் சுற்றில் தகுதிப் பெற்ற நாடுகளும் 2வது சுற்றில் விளையாடும். அதில் தகுதிப் பெறும் அணிகள் 3, 4வது என அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி முதல் சுற்றில் விளையாட உள்ள 12 நாடுகளுக்கான போட்டி அட்டவணையை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.