கொட்டிவாக்கத்தில் பரபரப்பு ஓடும் கார் தீப்பிடித்து நாசம்: டிரைவர் உள்பட 5 பேர் தப்பினர்

வேளச்சேரி: கொட்டிவாக்கத்தில் ஓடும் காரில் தீப்பிடித்ததால் டிரைவர் உள்பட 5 பேர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (28) கால் டாக்சி டிரைவர். நேற்று திருப்போரூரில் இருந்து 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் மாலை 3 மணியளவில் சென்னை ராஜிவ்காந்தி சாலையில், கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் திடீரென்று  குபுகுபுவென புகை வெளியேறியது. இதை பார்த்த சுந்தர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பயணிகளை கீழே இறக்கினார். அவர்கள், அங்கிருந்து தள்ளி சென்ற சற்று நேரத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனே, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை  அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.இதுதொடர்பாக தரமணி காவல் நிலைய போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர். ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: