தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் பூட்டி சாகுபடி பணிகள் தொடங்குவது வழக்கம். இப்படி துவங்கினால் அந்தாண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழக்கம் பல கிராமங்களில் மறைந்து விட்டாலும், சில கிராமங்களில் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தஞ்சை அருகே உள்ள டவுன்கரம்பை, வேங்கராயன்குடிகாடு, பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை நல்லேர் பூட்டும் விழா நடந்தது. இதற்காக மாடுகளை நீராட்டி, பொட்டு வைத்தும், வயலில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரியநாராயண பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது உழவு செய்ய வேண்டிய இடத்தில் இயற்கையான உரங்களை தெளித்தும், நவதானியங்களை தூவியும், பின்னர் ஏர்கலப்பையில் மாட்டை பூட்டி விவசாயிகள் உழவு செய்தனர். இதில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.