புதுடெல்லி: நாட்டில் உள்ள சிறைகளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். தாயுடன் 1,942 குழந்தைகளும் சிறையில் வாடுகின்றனர்.சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பற்றிய 2016க்கான புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரம் வரமாறு: கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி இந்தியாவில் உள்ள 1,400 சிறைகளில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 3 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தண்டனை கைதிகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 பேரும், விசாரணைக் கைதிகளாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 பேரும், பிறவகை கைதிகளாக 3,089 பேரும் உள்ளனர். மொத்தமுள்ள கைதிகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 67.7 சதவீதமாக உள்ளது.
இது தவிர 1,649 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,942 குழந்தைகளும் சிறையில் வாடுகின்றனர். கடந்த 2014ம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 879 பேராக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை, கடந்த 2016ம் ஆண்டில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.