சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீதிவீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோட்டூர் பகுதியில் 172அ, 172, 171அ ஆகிய வார்டுகளில் நேற்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சைதை கிழக்கு பகுதி செயலாளர் இரா.துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கலிக்குன்றம், அம்பேத்கர் சிலை, திருவீதியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ஏரிக்கரை சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, சிஐடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார். அப்போது, தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தென்சென்னை தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். நீங்கள் அளிக்கும் உற்சாகமான வரவேற்பினால், நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கூறும் பிரச்னைகளை உன்னிப்பாக கேட்டு வருகிறேன்.