சென்னை; டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிபதற்காக காலக்கெடுவை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என எழுந்த புகாரையடுத்து காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கம் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எழுதலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறுவார்கள். அதே போல 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.