‘‘வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடிக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்து முயற்சிகளும் எடுக்கும். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை வாபஸ் பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார். கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி.சுனீர் என்பவரை ஆளும் இடது முன்னணி நிறுத்தியிருந்தது. இந்நிலையில் இத்தொகுதியில் ராகுல் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆத்திரம் அடையச் செய்தது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: வயநாட்டில் ராகுல் காந்தி நிறுத்தப்படுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் போராடுவோம். இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்போம். அங்கு பிரசாரம் செய்ய நான் 10ம் தேதி செல்கிறேன். அங்கு எங்கள் கட்சி வேட்பாளரை வாபஸ் பெறும் கேள்விக்கே இடமில்லை. பா.ஜ வலுவாக உள்ள கர்நாடகா அல்லது பிற மாநிலத்தில் உள்ள தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்திருக்கலாம். இந்த போட்டி நல்ல முடிவை ஏற்படுத்தப் போவதில்லை.