லண்டன்: இங்கிலாந்தில் வரிஏய்ப்பு செய்து அல்கொய்தாவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அரசு ஏஜென்சிகளில் ஊடுருவியும் ஒரு மோசடி கும்பல் வரிஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளிடம் பிரிட்டன் மக்களின் வரிப்பணம் கைமாற்றப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பல் தங்கள் வரிஏய்ப்பு தொகையிலிருந்து 1 சதவிகிதத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு நன்கொடையாக அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இங்கிலாந்து வருவாய்துறையை ஏமாற்றியும் கிரெடிட் கார்டு, வங்கி மற்றும் தனிநபர் மோசடி மூலமும் கடந்த 20 ஆண்டுகளில் 80மில்லியன் பவுண்ட் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு பகுதி பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு முன்பு அந்த மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி கும்பல் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஆசிய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது.