``முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ஏலம் எடுத்துள்ளார். அதில் அவர் லாபம் சம்பாதிக்கிறார்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து இருக்கிறார்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:மாநில அரசுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழக அரசை சர்வாதிகார அரசு என்றுதான் கூற வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து குறும்படம் வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலனை ஒரு மாதமாக காணவில்லை. மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் வெளியிட்ட மாணவி வளர்மதி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி கைது செய்யப்படுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மீது வழக்கு போடப்பட்டது.