சென்னை: கீழ்கட்டளையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம்தென், அன்னை சத்யா நகரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாக நேற்று மதியம் சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த சொகுசு காரில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த நபர் கீழ்கட்டளை, அருள்முருகன் நகர் விரிவு, நான்காவது தெருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபர் பழனிசாமி (42) என்பது தெரியவந்தது.