சென்னை: நடிகை நமீதாவிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவமரியாதையாக நடந்துகொண்டனர் என்று நமீதாவின் கணவர் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நேற்று நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நமீதாவின் கணவர் வீரா வெளியிட்ட அறிக்கை:படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2.30 மணி இருக்கும். சேலம் - ஆற்காடு சந்திப்பை அடைந்தபோது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். நமீதா படுத்திருந்த காரின் பின்புறம் கதவை அதிகாரி திறந்தார். இதனால் நமீதா காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். நமீதாவின் பையை சோதனை செய்ய முயன்றார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.