பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த, நவமலை குடியிருப்பு பகுதியில், மீண்டும் காட்டு யானை பகல் நேரத்தில் வந்து செல்வதால், அதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால், அடர்ந்த காட்டிலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர்நிலையை தேடி இடம் பெயர்கிறது. இதில் ஆழியார் அணையையொட்டியுள்ள காட்டு பகுதியிலிருந்து ஒற்றை யானை, அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் சுற்றித்திரிவதால், அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குரங்கு அருவியருகே யானைகள் வராமல் தடுக்க, வனத்துறை ஊழியர்கள் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த ஒற்றை யானை தற்போது, நவமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலிலேயே அடிக்கடி உலா வருகிறது.