ஐபிஎல் வீரர்கள் விளையாடும் இடங்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: பிரதருக்கு கிர்க்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை

டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் எங்கு விளையாடுகிறார்களோ அங்கிருந்து தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கிர்க்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். கடந்த 13ம் தேதி அன்று கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும்,  அவர் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் தலைவர்கள் மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாவ், மு.க.ஸ்டாலின் உட்பட பலருக்கு அவர் டிவிட்டரில் தகவல் அனுப்பி வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் அவர் நேற்று தனது ‘சவுகிதார் நரேந்திர மோடி’ என்ற டிவிட்டர் முகவரியிலிருந்து, அரை மணி நேரத்தில் நாட்டு மக்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலருக்கு 16 தகவல்களை அனுப்பினார். அவர் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘‘என் இந்திய மக்களே, வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்து வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டும். உங்களின் வாக்கு, நாட்டின் எதிர்காலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என கூறியுள்ளார். மேலும் சினிமா பிரபலங்கள் ஹிருத்திக் ரோஷன், அனுபம் கேர், மாதவன், அனில் கபூர், அஜய் தேவ்கான், மாதுரி தீட்சித், கிர்க்கெட் வீரர்கள், தவான், புவனேஸ்குமார், அஸ்வின் உட்பட பல பிரபலங்களுக்கும் அவர் வாக்களிப்பதை ஊக்குவிக்குமாறு டிவீட் செய்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக கிர்க்கெட் வீரர் அஸ்வின் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் பல்வேறு பகுதிகளில் விளையாடுவதால் அவர்கள் எங்கு விளையாடுகிறார்களோ அங்கிருந்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: