தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆற்காட்டில் பாமக வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராமதாஸ் கூறினார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆற்காடு பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிக வாக்கு உள்ளவர்கள் பெண்கள். அவர்களுக்கு ஆக்கும், காக்கும், அழிக்கும் சக்தி உள்ளது. அவர்கள் நினைத்தால் எதையும் மாற்ற வல்லவர்கள். அதிமுக கூட்டணி தெளிந்த நீரோடைபோல் உள்ளது. நான் டாக்டராக இருந்தாலும் விவசாயத்தை விடாமல் செய்தவன். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாய குடும்பத்தில் வந்தவர். அதனால் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு நாங்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம்.