பெரம்பூர்: தண்டையார்பேட்டை, ஆலந்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது முறையான ஆவணம் இல்லாத பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஞானசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தியபோது, கார் டிக்கிக்குள் 55 லட்சம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு முறையான ஆவணமில்லை. காரில் வந்த டேவிட் மோகன், விஷ்ணு ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.