புதுடெல்லி: பிரதமர் மோடி 2வது தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜ 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் 2வது தொகுதியாக பூரியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தொகுதியில் பாஜ செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்றிரவு வெளியான 4வது பட்டியலில் வதோதரா தொகுதியில் தற்போதைய எம்.பி. ரஞ்சன் பென் பாஹ்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மோடி 2வது தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2வது கட்ட பட்டியலில், மகாராஷ்டிராவில் 6, ஒடிசாவில் 5, அசாம், மேகாலயாவில் தலா ஒரு மக்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இது தவிர ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் ஒடிசாவில், 22 பேரவை வேட்பாளர்களையும் பாஜ அறிவித்தது. அதேபோன்று, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை, மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் நேற்று அறிவித்தார். இதில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடும் நவடா தொகுதி, கூட்டணி கட்சியான லோக் ஜன சக்திக்கு ஒதுக்கப்பட்டதால், இம்முறை அவர் பெகுசராய் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்த மற்ற மத்திய அமைச்சரவை சகாக்கள் ராதா மோகன் சிங், ஆர்.கே. சிங், அஷ்வனி குமார் சவுபே, ராம் கிரிபால் யாதவ் ஆகியோர் முறையே மோதிஹரி, அரா, பக்சார், பாடலிபுத்ரா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு இம்முறை மாநிலங்களவை சீட்டுக்கு மாறுவதால் அவரது தம்பிக்கு பராஸ் ஹஜிபூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.