சென்னை: முதன்முதலாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினரிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுத்தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், பொதுத்தேர்தல்-மக்கள் தீர்ப்பு என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட கையேடு மற்றும் குறுந்தகட்டினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் நேற்று வெளியிட்டார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேசியதாவது: தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வசதியாக திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெறும் வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம், பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.