பந்தலூர்: பந்தலூர் அருகே உள்ள மானூர் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மானூர் பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் 1.7 மீ., தூரம் தார் சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.