சென்னை: ஜாக் டோ-ஜியோ போராட்டத்தை ஆதரித்தவர் யார், எதிர்த்தவர் யார் என்று நன்றாக தெரியும். அதனால் தேர்தலில் நடுநிலையோடு பணியாற்ற உள்ளோம் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அன்பரசு, வின்சென்ட் பால்ராஜ், கேபிஓ.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தாரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்பது, தேர்தல் பணி மற்றும் தபால் ஓட்டுப்பதிவு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையரை 29ம் தேதி சந்தித்து முறையிடுவது, பொள்ளாச்சி கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.