படோகி: உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மீது ஆளும் பாஜ அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ெபாதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். கங்கையில் படகு பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி படோகி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். அப்போது அவரிடம் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் 2 ஆண்டு கால சாதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரியங்கா கூறியதாவது: யோகி ஆதித்யநாத் அரசின் முன்னேற்ற அறிக்கை சிறப்பானதாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது. வளர்ச்சி நிலவரம் அறிய பாஜவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும். அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்ததற்கும் அதை நிறைவேற்றியதிலும் பெரிய வேறுபாடு காணப்படுகிறது.